இதில் சதீஷ் ரெட்டி ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருப்பது தெரியவந்தது. உடனே அங்கு சென்ற போலீசார், கடப்பா பஸ் நிலையத்தில் சதீஷ் ரெட்டியை கைது செய்தனர். பின்னர் போலீசார் சதீஷ் ரெட்டியை திருவனந்தபுரத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 4ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள சதீஷ் ரெட்டி பணக்காரர்களின் வீடுகளில் எப்படி கொள்ளையடிப்பது என்பதை யூடியூபில் பார்த்து அரங்கேற்றி வந்துள்ளார். எவ்வளவு பெரிய சுவராக இருந்தாலும் மிகவும் சுலபமாக ஏறிக் குதித்து விடுவார். இதனால் தான் அவருக்கு ‘ஸ்பைடர் மேன்’ என்ற பெயர் வந்தது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்பட மாநிலங்களில் இவர் மீது 70க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. ஆந்திராவிலுள்ள ஒரு முன்னாள் அமைச்சரின் வீட்டிலிருந்து இவர் 7 கிலோ நகைகளை கொள்ளையடித்தார். கடந்த ஏப்ரலில் காஞ்சிபுரத்தில் ஒரு நகை வியாபாரியின் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ நகைகளை கொள்ளையடித்த சதீஷ் ரெட்டியை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மே மாத இறுதியில் சிறையிலிருந்து விடுதலையானவர் 4 நாட்களிலேயே திருவனந்தபுரத்திலுள்ள வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.