கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்

சென்னை: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆர்.முனிரத்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக மணல் குவாரிகள் இயங்கவில்லை. இதனால் 75000 மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மற்றும் 10 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மணல் இல்லாமல் கட்டுமான தொழில் தமிழகம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மணல் லாரிகள் ஓடாத காரணத்தினால் எங்களால் சாலை வரி மற்றும் மாதத் தவணைகள் கட்ட இயலவில்லை. தற்பொழுது நம்முடைய அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அந்த மாநிலத்தின் கனிம வளத்துறை அமைச்சர் கொள்ளுறு ரவிந்திரா ஆந்திராவில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அனைவருக்கும் வருகிற 8ம் தேதி(திங்கட்கிழமை) முதல் 120 மணல் குவாரிகளை திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக முதல்வர் தமிழகத்தை சேர்ந்த மணல் லாரிகள் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மணல் எடுத்து வர தாங்கள் ஆந்திர முதல்வரிடம் கோரிக்கை வைத்து தமிழக மணல் லாரி உரிமையாளர்களுக்கு அனுமதி வாங்கித் தர வேண்டும். இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கட்டுமான தொழில்கள் அதிகமாக நடைபெறும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பொது மக்களின் சிறிய வீடுகள் மற்றும் சிஎம்ஆர்எல் கட்டுமான வேலைகளுக்கு மணல் மிகவும் அவசியமனதாக உள்ளது. தமிழக முதல்வர் எங்கள் மணல் லாரி உரிமையாளர்களின் தொழிலை வாழ வைக்க வேண்டும். கட்டுமான தொழிலை நம்பி பல லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Related posts

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளால் இளநிலை ‘நீட்’ தேர்வு ரத்தாகுமா?: உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்

ஜம்மு- காஷ்மீரில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்

விக்கிரவாண்டியில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது; 10ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: அமைச்சர் உதயநிதி இறுதி கட்ட பரப்புரை