சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்ட திட்டத்தில் கலங்கரை விளக்கம் – போட் கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணியை ‘கழுகு’ என பெயரிடப்பட்ட இயந்திரம் தொடங்கியது. மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-II, வழித்தடம்-4-ல் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. “ஃபிளமிங்கோ” என பெயரிடப்பட்ட முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் 01.09.2023 அன்று சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கி வழித்தடம்-4-ல் கலங்கரை விளக்கத்தில் இருந்து (downline) போட் கிளப் நிலையம் வரை சுரங்கப்பாதை அமைத்து வருகிறது.
“கழுகு” என பெயரிடப்பட்ட அதன் இணையான சுரங்கம் தோண்டும் இயந்திரம், கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து (upline) திருமயிலை நோக்கி வெற்றிகரமாக சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் அக்டோபர் 2026ல் போட் கிளப் நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆர்.ரங்கநாதன் (கட்டுமானம்), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள் மற்றும் AEON நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.