நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: நமது அரசியலமைப்பு சட்டம் தீண்டாமையை நீக்குவதாக இருக்கவேண்டும். அனைவருக்குமான சமத்துவம் கொண்டதாக இருக்கவேண்டும். தற்போதைய காலத்தில் சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பது விலை உயர்ந்ததாக உள்ளது. சுதந்திரத்திற்காக போராடும் போது ஒற்றுமையாக இருந்தோம். அதன் பிறகு அவரவர் தாய் நிலம் என்றும் தாய்மொழி என்றும் பிரிந்து உள்ளோம். நாம் தனித்துவம் வாய்ந்த நாடு என்பதை உணரவேண்டிய நேரம் இது. நமது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றும் நேரம் இது. சுதந்திரம் பெற்ற பின் மக்கள் வளர்ச்சியை நோக்கி நகரவேண்டும்.
ஆனால் குறிப்பிட்டவர்கள் மட்டுமே வளர்ச்சியை நோக்கி முதல் வரிசையில் நிற்கின்றனர். அனைவராலும் ஏற்றுக்கொள்ள கூடிய அனைவருக்குமான அரசிலமைப்பு சட்டத்தை இயற்றினால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் என்று இருந்த போது, முகமது அலி ஜின்னா தனிநாடு கேட்டு போராடினார். அரசியலமைப்பு சட்டம் இயற்றுவதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டது. தனித்துவம் வாய்ந்த பல்வேறு குழுக்களின் மூலம் நமது அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. நாம் மாநிலங்கள் என்ற அளவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளோம்.
நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தும் பல்வேறு கருத்துகள் இங்கே பரவி உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது. மிகுந்த அழுத்தங்களுக்கு இடையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பது குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இது. நீதிமன்றங்களில் மட்டும் இல்லாமல் சட்ட பல்கலைக்கழகங்களிலும் அரசியல் அமைப்பு சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.