கன்னிமாரா நூலகம் (அரிதான நூல்களின் பெட்டகம்)

தமிழகத்தின் தலைநகரமான சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் சுற்றிலுமிருக்கும் பழமை வாய்ந்த மியூசியக் கட்டிடங்களின் நடுவில் புதுப்பொலிவோடு வீற்றிருக்கிறது கன்னிமாரா நூலகம். 1890ம் வருடம் மெட்ராஸ் கவர்னராக இருந்த லார்டு கன்னிமாரா பொது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், 1896ல் இந்த நூலகம் திறக்கப்பட்டபோது அவர் லண்டன் திரும்பிவிட்டார். இருந்தும், அன்றைய கவர்னராக இருந்த சர் ஆர்தர் எலி பங்க், கன்னிமாராவின் எண்ணத்திற்கு மரியாதைசெய்து அவரது பெயரையே நூலகத்திற்குச் சூட்டினார். இந்தியாவில் பொது மக்கள் பயன்பாட்டுக்கென்று ஆரம்பித்த முதல் பொது நூலகம் இதுதான்.இதற்கான டிசைனை அன்றைய ஆர்கிடெக்சர் இர்வின் வடிவமைத்துள்ளார். நம்பெருமாள் செட்டியார் என்பவர் நூலகத்தைக் கட்டியுள்ளார். அப்போது நூலகத்தை கட்ட 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவாகியிருக்கிறது.இங்குள்ள நாற்காலிகள் எல்லாம் ஒரிஜினல் தேக்கால் ஆனவை. நூல்கள் அதிகரித்ததன் காரணமாக 1973ல் புதிய கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது.முதல்தளம் முழுவதும் நாளிதழ் பிரிவு. தினசரிகள் தவிர்த்து வாரம், வாரம் இருமுறை, மாதம், மாதம் இருமுறை என இந்தியாவிலிருந்து வெளியாகும் பருவ இதழ்கள் வரிசை கட்டுகின்றன. Way to old building என எழுதப்பட்டிருக்கும் கதவைத் திறந்து நடந்தால் புது பில்டிங்கை பழைய பில்டிங்கோடு இணைத்திருக்கும் புதிய பாதையைக் கடந்ததும் இருப்பது லார்டு கன்னிமாராவின் கனவு லைப்ரரி. வட்டவடிவிலான வெளிஅறை. அதில், வட்டமாக மேஜைகள் இருக்கும். இரண்டு பக்கமும் மரத்திலான ரேக்குகள். தவிர, இரும்பு ரேக்குகளும். ஒவ்வொன்றும் தலைப்புகள் வாரியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.

நடுவில் மார்பு அளவிலான மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை வரவேற்கிறது. இதன் எதிரே நூல்களை என்ட்ரி போடும் மேஜையும், அதன் இருபுறமும் இரண்டு வழிப்பாதைகளும் உள்ளன. வழிகள் சிறிய மரத்தடுப்புகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு லோக்சபா, ராஜ்யசபா, தமிழ்நாடு சட்டசபையில் நடந்த விவாதங்கள் 1937ல் இருந்து இருக்கின்றன. தவிர, 1871ல் இருந்து இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பும், அரிதான புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.1689ல் சார்லஸ் என்பவரால் எழுதப்பட்ட ‘voyage of surat’, 1919ல் ரங்காசாரி எழுதிய ‘A Topographical list of inscriptions of the madras presidency’, வில்சன் எழுதிய ‘History of The Madras Army’ என பல அரிய நூல்கள் இங்கு உள்ளன. கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்ட மிக மிக அரிய நூல்களான 1578ல் ஹென்றிக்ஸ் அடிகளார் எழுதி அச்சில் ஏறிய முதல் தமிழ் நூலான, ‘தம்பிரான் வணக்கம்’, 1560ல் வெளியான பைபிள்போன்றவை மிக மிக அரிதானவை.இந்தப் பொது நூலகச் சிந்தனை 1890ல் ரெடியாகி இருந்தாலும் அதற்கு முன்பே மியூசியத்தின் உள்ளே ஒரு சின்ன லைப்ரரியை அமைத்திருந்தார் மியூசிய காப்பாளராக இருந்த கேப்டன் ஜீன் மிட்செல். 1861ல் லண்டன் ஹெய்லிபெர்ரி யுனிவர்சிட்டியில் இருந்து கொண்டு வந்த புத்தகங்களை வைத்துதான் இந்த குட்டி நூலகம் உருவானது. அதன் தொடர்ச்சியா உருவானதுதான் கன்னிமாரா நூலகம்.இரண்டாவது தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராட்டி போன்ற இந்திய மொழிகளில் வெளியான நாவல்கள், இலக்கியங்கள், கவிதைகள் எனப் பல்வேறு நூல்களை இங்கே வைத்துள்ளனர். அடுத்து மூன்றாவது தளம். இங்கே பள்ளி, கல்லூரிகளுக்கான பாடநூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.இந்நூலகம் தினமும் காலை 9 மணியிலிருந்து இரவு 7.30 வரையும், ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் மாலை 6 வரையும் செயல்படும்.

– பேராச்சி கண்ணன்

 

Related posts

14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!

லால்குடி அருகே பெண் தெய்வ கற்சிலை கண்டெடுப்பு

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் மோடி பங்கேற்பு; பல்வேறு தரப்பினரும் விமர்சனம்