புதுடெல்லி: காங்கிரஸ் எம்பி ஆதிர்ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக ஆதிர்ரஞ்சன் சவுத்ரி உள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது,ஒன்றிய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் பிரதமர் பேசும் போது இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆதிரை சஸ்பெண்ட் செய்வதாக கூட்டத்தின் கடைசி நாளன்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி உரிமைகுழுவுக்கு ஓம் பிர்லா உத்தரவிட்டிருந்தார்.
கடந்த 18ம் தேதி உரிமை குழுவின் முன் நேரில் ஆஜராகிய ஆதிர் யாருடைய மன உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்பது தனது நோக்கம் அல்ல என்றும் குறிப்பிட்ட கருத்துகளுக்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறினார். இதில் கலந்து கொண்ட பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதிர் மீதான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில்,நேற்று நடந்த உரிமைக்குழு கூட்டத்தில் ஆதிர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டது.