சென்னை: இளைஞர்கள் மத்தியில் கோர தாண்டவம் ஆடும் வேலையின்மையை ஒழிக்க ராகுல்காந்தியின் அறிவுரைப்படி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 5 வாக்குறுதிகள் இடம்பெற உள்ளது. ஒன்றிய அரசின் 30 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ப.சிதம்பரம் கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில், முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அகில இந்திய தொழில் வல்லுநர் பிரிவு காங்கிரஸ் தலைவர் பிரவின் சக்கரவர்த்தி ஆகியோர் சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, ப.சிதம்பரம் கூறியதாவது:
இளைஞர் தினத்தை முன்னிட்டு, ராகுல்காந்தி 5 வாக்குறுதிகளை தந்துள்ளார். இந்த 5 வாக்குறுதிகளும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறுகிறது. இன்று வேலையில்லாமை கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. மொத்த வேலையில்லாமை 8 சதவீதம். பட்டம் பெற்றவர்கள் மத்தியில் வேலையில்லாமை 42 சதவீதம். இதை போக்குவதற்கு முதல் வழி, ஒன்றிய அரசில் இருக்கக்கூடிய காலி இடங்களை நிரப்ப வேண்டும். அதன் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் 30 லட்சம் காலி இடங்கள் உள்ளது. இதை பூர்த்தி செய்ய வேண்டும்.
இவை அனுமதிக்கப்பட்ட காலி இடங்கள். காங்கிரஸ் அரசு அமைந்தால் முதல் கியாரண்டியாக 30 லட்சம் காலி இடங்களை பூர்த்தி செய்வோம். 2வது கியாரண்டியாக, அரசு நடத்தக்கூடிய தேர்வுகளில் கேள்வி தாள் கசிவதை புதிய சட்டத்தை நிறைவேற்றி தடுப்போம். கேள்வி தாள் கசிந்தால் அந்த குற்றவாளிகளை அடையாளம் கண்டு விரைவு நீதிமன்றத்தில் உடனடியாக தண்டனை பெற்று தருவோம்.
3வதாக பயிற்சியாளர்கள் சட்டத்தை கொண்டு வருவோம். ஏற்கனவே இருப்பது உப்பு சப்பு இல்லாத சட்டம்.
நாங்கள் கொண்டு வரும் சட்டத்தின்படி தனியார், அரசு பொதுத்துறை நிறுவனம் இரண்டுமே கட்டாயமாக பயிற்சியாளர்களை பணிக்கு வைக்க வேண்டும். 10 லட்சம் நிறுவனங்களில் பயிற்சியாளர்களை நியமிக்க முடியும். அப்படி செய்தால் ஏராளமான இளைஞர்களுக்கு பயிற்சி கிடைக்கும், வேலை கிடைக்கும். 4வதாக ஆங்கிலத்தில் ‘கிக் ஒர்க்கர்’ என்று சொல்வோம். அதாவது ஸ்விக்கி போன்ற தொழிலாளர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது.
இவர்களுக்காக ஒரு சட்டம் கொண்டு வந்து இவர்களின் பணிகளை ஒழுங்குபடுத்துவோம். 5வது கியாரண்டி, பல இளைஞர்களுக்கு தொழில் தொடங்க எண்ணங்கள், சிந்தனை இருக்கிறது. ஆனால் தொழில் தொடங்க முதலீடு அவர்களிடம் இல்லை. 10 ஆயிரம் கோடி ரூபாய் புதிய தொழில் தொடங்க அரசு நிதியில் உள்ளது. அதில் பாதி தொகை ரூ.5000 கோடியை எடுத்து ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு ரூ.10 கோடி என்று ஒதுக்கினால் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உள்ளது. ஏறத்தாழ ரூ.5,500 கோடி தேவைப்படும்.
அந்த தொகுதிக்கு உட்பட்ட இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வந்தால் இந்த ரூ.10 கோடியில் இருந்து முதலீடு வழங்கப்படும். அப்படி செய்யும் போது தனி தொகுதியில் தலித் இளைஞர்கள் இருப்பார்கள். பின்தங்கிய தொதிகுளில் பின்தங்கிய இளைஞர்கள் இருப்பார்கள். பல தொகுதிகளில் சிறுபான்மை, மலைவாழ் மக்கள் இருப்பார்கள். அவர்களுக்கும் முதலீடு கிடைக்கும். இப்போது, ஒன்றிய பாஜ ஆட்சியில் மேட்டுகுடி வர்க்கத்துக்கு மட்டுமே முதலீடு கிடைக்கிறது. ஆக இந்த 5 கியாரண்டிகளையும் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் முன்வைக்கிறது.
தேர்தல் வந்தவுடன் பல திட்டங்களுக்கு அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு மக்களை மோடி ஏமாற்றுகிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டம் ஒழிக்கப்படும். கடற்படை, ராணுவப்படையில் பழைய முறைப்படியே ஆள் எடுப்பு முறை நடத்தப்படும். எஸ்பிஐ வங்கி ஒன்றிய பாஜ அரசுக்கு உடந்தையாக செயல்படுகிறது. இந்திய பொருளாதாரத்தை இரண்டு லைனில் சொல்லக்கூடிய ஒரே நபர் பிரதமர் மோடி மட்டும் தான். நல்லா இருக்கு என்று ஒரே லைனில் சொல்லி முடித்து விடுவார்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத், முன்னாள் தலைவர் தங்கபாலு, பொருளாளர் ரூபி மனோகரன், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, ெசார்ணா சேதுராமன், இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விச்சு லெனின் பிரசாத், முதன்மை செயலாளர் அஸ்வத்தாமன், இலக்கிய அணி தலைவர் புத்தன், மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், சுமதி அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.