ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் நடந்த மதுபான விற்பனை ஊழல் விவகாரத்தில் ராய்ப்பூர் மேயரின் சகோதரர் அன்வரை அமலாக்கத்துறை கைது செய்தது. காங்கிரஸ் ஆளும் சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில் அஜாஸ் தேபர் மேயராக பதவி வகிக்கிறார். இவரது மூத்த சகோதரர் அன்வர், மதுபான வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், மதுபான விற்பனையில் வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடும் நடந்ததாக அமலாக்கத்துறை சமீபத்தில் வழக்கு பதிவு செய்து மாநிலத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. இந்த விவகாரத்தில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில், ராய்ப்பூர் மாவட்டத்தில் ஓட்டலில் தங்கியிருந்த அன்வரை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நேற்று காலை கைது செய்தது. சிஆர்பிஎப் போலீசார் பாதுகாப்புடன் அன்வரை ராய்ப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.