காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது குமரி ஆனந்தனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கவுள்ளார். சங்கரய்யா, நல்லக்கண்ணு, கீ.வீரமணி ஆகியோரை தொடர்ந்து குமரி ஆனந்தனுக்கு தகைச்சால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளியான அறிக்கையில்; “தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021-ல் ஆணையிட்டிருந்தார்.

இந்த விருதினை கடந்த 3 ஆண்டுகளில் சங்கரைய்யா , ஆர். நல்லகண்ணு மற்றும் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதிற்கான நடப்பாண்டு விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று (1.8.2024) நடைபெற்றது.

அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் காந்தி ஃபோரம் அமைப்பின் தலைவரும் இலக்கியச் செல்வராகவும், இலக்கியக் கடலாகவும், எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் விளங்கும் குமரி அனந்தன் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரதுபெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.

தகைசால் தமிழர் விருது’க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குமரி அனந்தன் அவர்களுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி