திருவொற்றியூர்: திருவொற்றியூர் வரதராஜபெருமாள் கோயிலில் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மறியல் நடத்தினர். சென்னை திருவொற்றியூர் மண்டலம் சன்னதி தெருவில் வரதராஜபெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் காலடிப்பேட்டை மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் வியாபாரிகள் பலர் கடைகள் அமைத்தும் தகர கொட்டகை வைத்தும் ஆக்கிரமித்து இருந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்களும் பக்தர்களும் தவித்தனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவந்தனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள், பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது கடைக்காரர்கள் வைத்திருந்த சிசிடிவி கேமரா உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடும் வாக்குவாதம் செய்தனர். முன்னறிவிப்பு இல்லாமல் நள்ளிரவில் வந்து ஆக்கிரமிப்புகளை அகற அகற்றியது ஏன் என்று கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். அத்துடன் வியாபாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் சேதப்படுத்திவிட்டனர் என்று புகார் தெரிவித்து கோஷம் எழுப்பினர். திடீரென அவர்கள் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. தகவலறிந்து அறிந்ததும் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு வந்து மறியல் நடத்திய வியாபாரிகளை சமாதானப்படுத்தினார். ‘’உங்கள் பிரச்னை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.