திருப்பதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தா மோகன் தலைமையில் நேற்று திருமலை தேவஸ்தானத்தினை கண்டித்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். அதில் அவர் பேசியதாவது:
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் தன்னிச்சையாகவே உள்ளது. ஏழை எளிய பக்தர்கள் வழங்கும் உண்டியல் காணிக்கையை கொண்டு திருப்பதி ரயில் நிலையம் அருகே ரூ.600 கோடி மதிப்பில் ஏற்கனவே உள்ள சத்திரங்களை இடித்து புதிய கட்டிடம் கட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இங்கு அவ்வளவு பெரிய தொகையுடன் கட்டிடம் கட்டுவது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும், இதில் சிலருக்கு லாபம் ஏற்படுத்தும் வகையில் இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.50 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.
தேவஸ்தான நிதியை முறைகேடாக பயன்படுத்தும் அறங்காவலர் குழு உடனடியாக இத்திட்டத்தை கைவிட வேண்டும். இல்லை என்றால் பக்தர்களின் காணிக்கை காக்க நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.