காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாபு (45). இவர், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள காமராஜர் வீதியில் உள்ள வணிக வளாகத்தின் முதல்மாடியில் கம்ப்யூட்டர் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை கடையை திறந்து, பாபு வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பல்லியை போன்று உருவம் கொண்ட பெரிய உயிரினம் ஒன்று கடைக்குள் புகுந்து அங்கும், இங்குமாக வேகமாக ஓடியது. இதனைகண்டு, அதிர்ச்சியடைந்த பாபு இதுகுறித்து காஞ்சிபுரம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் பார்த்தபோது, பதுங்கி இருந்தது உடும்பு என தெரியவந்தது. பின், பிரத்யேக உபகரணம் வாயிலாக, சில மணி நேரம் போராடி 1.5 அடி நீளமுள்ள உடும்பை பிடித்து, பாலாற்றங்ரை ஒட்டியுள்ள புதர்மண்டிய பகுதிக்குள் விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.