திருவனந்தபுரம்: பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பியாக இருந்தவர் சுஜித் தாஸ். இவர் மலப்புரம் மாவட்ட எஸ்பியாக இருந்தபோது அரசு இல்லத்திருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மரங்களை வெட்டிக் கடத்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் சுஜித் தாஸ் உள்பட 3 போலீஸ் அதிகாரிகள் மீது மலப்புரம் மாவட்டம் பொன்னானியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் பலாத்கார புகார் கூறியுள்ளது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த இளம்பெண் நிருபர்களிடம் கூறியது: கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு சொத்துப் பிரச்னை தொடர்பாக பொன்னானி இன்ஸ்பெக்டரை சந்தித்து புகார் கொடுத்தேன். அதன்பின் புகாரை விசாரிப்பதற்காக கூறி வீட்டுக்கு வந்த அவர் என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார். இதுகுறித்து புகார் செய்வதற்காக திரூர் டிஎஸ்பி பென்னியை சந்தித்தேன்.
அவரும் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். இது பற்றி புகார் கொடுக்க எஸ்பியாக இருந்த சுஜித் தாசை அணுகினேன். சில நாட்கள் கழித்து என்னை போனில் தொடர்பு கொண்ட எஸ்பி சுஜித் தாஸ், தான் கூறும் ஒரு இடத்தில் காத்திருக்குமாறு கூறினார்.அங்கு வந்த அவர் ஒரு சொகுசு காரில் என்னை அப்பகுதியிலுள்ள ஒரு பங்களாவுக்கு கொண்டு சென்றார். அங்கு வைத்து என்னை எஸ்பி சுஜித் தாஸ் பலாத்காரம் செய்தார். மேலும் அவருடன் வந்த ஒரு சுங்க இலாகா அதிகாரியுடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் நான் அதற்கு மறுத்து விட்டேன். அதன்பின் மீண்டும் ஒருமுறை எஸ்பி சுஜித் தாஸ் என்னை பலாத்காரம் செய்தார். இவ்வாறு அவர் கூறினார். ஆனால் இந்தப் புகாரை எஸ்பி, டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மறுத்துள்ளனர்.