ஐதராபாத்: அருவருப்பான கருத்துக்களை வெளியிட்ட ஆந்திரா யூடியூபர் பிரனீத் ஹனுமந்து மீது தெலங்கானா போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஆந்திராவை சேர்ந்த யூடியூபர் பிரனீத் ஹனுமந்து, கடந்த சில தினங்களுக்கு முன் தந்தை – மகள் உறவு குறித்து அநாகரீகமான கருத்துகளை தெரிவித்திருந்தார். அருவருப்பான அவரது கருத்துக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை டேக் செய்து, ‘எதிர்காலத்தில் இதுபோன்ற மோசமான கருத்துகளை யாரும் வெளியிடக் கூடாது. இவ்விசயத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று சமூகவலை தளங்களை கருத்துகளை பதிவிடும் நபர்களால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே யூடியூபர் பிரனீத் ஹனுமந்து வெளியிட்ட பதவில், ‘நான் வெளியிட்ட வீடியோவில் இருந்து சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டேன். எனது கருத்துக்காக நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
படைப்பாளி என்ற அடிப்படையில் எனது கருத்தை தெரிவித்தேன். துரதிர்ஷ்டவசமாக நான் கூறிய கருத்து எனது எல்லையை கடந்துவிட்டது’ என்று தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக தெலங்கானா மாநில சைபர் செக்யூரிட்டி போலீசார், யூடியுபர் பிரனீத் ஹனுமந்து மீது எப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.