திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் ராமவர்மபுரத்தில் போலீஸ் அகாடமி உள்ளது. போலீசில் புதிதாக சேர்பவர்களுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த அகாடமியின் கமாண்டன்டாக இருந்தவர் பிரேமன். இந்தநிலையில் கடந்த 18ம் தேதி இங்கு பணிபுரியும் ஒரு பெண் அதிகாரியை கமாண்டன்ட் பிரேமன் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து பலாத்காரம் செய்ய முயற்சித்து உள்ளார். ஆனால் பெண் அதிகாரி அவரிடம் இருந்து தப்பினார்.
பின்னர் கடந்த 22ம் தேதி பிரேமன் அந்தப் பெண் அதிகாரியை மீண்டும் தன்னுடைய அலுவலகத்துக்கு வரவழைத்து பலாத்காரம் செய்ய முயற்சித்து உள்ளார். இந்த முறையும் அவரிடம் இருந்து தப்பிய அந்த பெண் அதிகாரி, விய்யூர் போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக கமாண்டன்ட் பிரேமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில் கமாண்டன்ட் பிரேமனை போலீஸ் அகாடமி இயக்குனர் விஜயன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.