Wednesday, October 2, 2024
Home » வண்ண மின்விளக்குகளால் ஜொலிக்கும் திருமலை திருப்பதி பிரமோற்சவம் நாளை மறுதினம் தொடக்கம்

வண்ண மின்விளக்குகளால் ஜொலிக்கும் திருமலை திருப்பதி பிரமோற்சவம் நாளை மறுதினம் தொடக்கம்

by Ranjith

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 4ம்தேதி(நாளை மறுதினம்) தொடங்குகிறது. இதை முன்னிட்டு நாளை (3ம் தேதி) அங்குரார்ப்பணம் எனப்படும் முளைப்பாரி நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அன்றிரவு 7 மணிக்கு ஏழுமலையானின் சேனாபதியான விஸ்வக்சேனாதிபதி வீதியுலா நடைபெறும். முதல் நாளான அக்டோபர் 4ம் தேதி மாலை 3 மணியளவில் கருட உருவம் பொறித்த பிரமோற்சவ கொடியை விஸ்வக்சேனாதிபதி, சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஆகியோர் யானைகள் அணிவகுப்புடன் வீதியுலா நடைபெறும்.

அதன்பின்னர் கோயில் தங்க கொடிமரத்தில் அன்று மாலை 5.45 மணி முதல் 6 மணிக்குள் மீன லக்னத்தில் வேதமந்திரங்கள் முழங்க பிரமோற்சவ கொடி ஏற்றப்படும். அன்றிரவு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க உள்ளார். தொடர்ந்து முதல் உற்சவமாக பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் பவனி நடைபெறும்.

2ம்நாள் (5ம் தேதி) காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அன்ன வாகனத்திலும், 3ம்நாள் (6ம் தேதி) காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும், 4ம்நாள் (7ம் தேதி) காலை கல்ப விருட்ச வாகனத்திலும், இரவு சர்வபூபால வாகனத்திலும் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளில் பவனி நடைபெறும். அதன் தொடர்ச்சியாக 5ம்நாள் (8ம் தேதி) காலை மோகினி அலங்காரத்தில் சுவாமி பவனி நடைபெறும். அன்றிரவு பிரமோற்சவத்தின் முக்கிய சேவையான கருடசேவை உற்சவம் நடைபெறும்.

6ம்நாள் (9ம் தேதி) காலை அனுமந்த வாகனம், மாலை தங்க ரதம், இரவு யானை வாகன பவனி நடைபெறும். 7ம்நாள் (10ம் தேதி) காலை சூரிய பிரபை வாகன உற்சவம், இரவு சந்திர பிரபை வாகன உற்சவத்திலும் ஏழுமலையான் பவனி நடைபெறும். 8ம் நாள் (11ம் தேதி) காலை மகா ரதம் எனப்படும் தேரோட்டம் நடக்கிறது. அன்றிரவு குதிரை வாகனத்தில் சுவாமி உற்சவம் நடைபெறும். 9ம்நாள் (12ம் தேதி) காலை புஷ்கரணியில் (குளம்) தீர்த்தவாரி நடைபெறும். அன்றைய தினம் கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. பிரமோற்சவத்தை முன்னிட்டு திருமலை முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.

You may also like

Leave a Comment

two × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi