ஜோலார்பேட்டை: கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜ நிர்வாகியை அப்பகுதி இளைஞர்கள் மடக்கிப்பிடித்தனர். இதனால் அவர் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(47). பாஜவில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் ஐஸ்வரியம் கார்டன் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஒருவரிடம் நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்லும்போதுபாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அந்த மாணவி அங்கிருந்து தப்பி சென்று அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த இளைஞர்கள், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜ நிர்வாகி சரவணனை பைக்கில் விரட்டி சென்று பிடித்து நிறுத்தியுள்ளனர்.
பின்னர், அவரை கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.