கல்லூரி மாணவர்களுக்காக வங்கியியல் மற்றும் பின்டெக் சான்றிதழ் படிப்புகள் அறிமுகம்

சென்னை: கல்லூரி மாணவர்களுக்காக, வங்கியியல் மற்றும் பின்டெக் என்ற சான்றிதழ் படிப்புகள் நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் திறன் மேம்பாட்டு மையம், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வங்கியியல் மற்றும் ‘பின்டெக்’ ஆகிய 2 சான்றிதழ் படிப்புகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அரசு கல்லூரிகள், மாநில பல்கலைக்கழகங்கள், உதவி பெறும் கல்லூரிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவை சேர்ந்த உதவி பெறாத கல்லூரிகளை சேர்ந்தவர்கள் இந்த படிப்புகளுக்கு www.tnfinskills.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நுழைவுத் தேர்வு வருகிற 16ம் தேதி நடத்தப்பட உள்ளது.

அதன்படி, வங்கி மற்றும் நிதி சார்ந்த படிப்புக்கு 250 மாணவர்களும், பின்டெக் படிப்புக்கு 200 மாணவர்களும் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். பின்டெக் பாடத்திட்டத்தில், டெக்னாலஜி மற்றும் வணிகம் சார்ந்த கற்றலை பெறுவார்கள். இந்த பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் செயல்முறை, ஆட்டோமேஷன் போன்ற வளர்ந்து வரும் பகுதிகளையும் கற்றுக் கொள்வார்கள். இந்த படிப்புகளில் சேருவதற்கு பி.இ., பி.டெக். (சி.எஸ்.இ., ஐ.டி., இ.சி.இ.), பி.சி.இ. (சி.எஸ்.இ., ஐ.டி.), பி.சி.ஏ., பி.எஸ்சி விஸ்காம் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும். அதேபோல், வங்கி மற்றும் நிதி படிப்புகளுக்கு பி.காம், பி.பி.ஏ., பி.ஏ. பொருளாதாரம், பி.எஸ்சி கணிதம், புள்ளியியல், பி.எச்.ஆர்.எம்., எம்.காம், எம்.பி.ஏ., எம்.ஏ.பொருளாதாரம், எம்.எஸ்சி கணிதம், புள்ளியியல், எம்.எச்.ஆர்.எம். படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Related posts

இந்தியன் 2 திரைப்படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்கக் கூடாது: சீமான் பேட்டி

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

மக்கள் தங்கள் மனதை மாற்றினால் மட்டுமே கோயில் திருவிழாக்களை கமுகமாக நடத்த முடியும் : ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து