சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி மிஷின்கள் முறையாக பராமரிக்கப்படாமல் வைக்கப்பட்டு உள்ளதாக வெளியான செய்தி அடிப்படையில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கல்லூரி கல்வி இயக்குனர் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் நீலகண்டன் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், 2017-18ம் ஆண்டு நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு 89 கல்லூரிகளில் பொருத்தப்பட்டது. அவை பழுதடைந்தால் சரி செய்து செயல்பட செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தியில் குறிப்பிடப்பட்ட ராணி மேரி கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள், தற்போது முழுமையாக செயல்படுகிறது. இதுசம்பந்தமாக இரு கல்லூரிகளின் முதல்வர்களும் புகைப்படத்துடன் அறிக்கை அளித்துள்ளனர். அனைத்து அரசு கல்லூரிகளிலும் மாணவிகளுக்காக, தலா ரூ.5 லட்சம் செலவில் தனி ஓய்வறைகள் கட்ட 8 கோடியே 55 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரமான சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது. அரசு தரப்பின் அறிக்கையை பதிவு செய்த நீதிபதிகள், விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறும், பள்ளிகளில் நாப்கின் இயந்திரங்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் பள்ளிக் கல்வி துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.