பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரியகாவனம் பகுதியைச் சேர்ந்தவர் சத்ரியன் (21), மீஞ்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயின்று வந்தார். நேற்று, அவர் தனது வீட்டின் அருகே பெரியகாவனம் பகுதியில் தண்டவாளத்தையொட்டி நடந்து சென்றார். அப்போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சத்ரியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, தகவலறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவன் சத்ரியன் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி இறந்தாரா, அல்லது மன உளைச்சல் காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா என ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.