Saturday, July 6, 2024
Home » கலாஷேத்ரா விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் கல்லூரி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்து நடவடிக்கை

கலாஷேத்ரா விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் கல்லூரி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்து நடவடிக்கை

by Arun Kumar

சென்னை: கலாஷேத்ரா விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் கல்லூரி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பாலியல் புகாரில் கைதான சென்னை கலாஷேத்ரா உதவி பேராசிரியர் பெண் தோழி வீட்டில் பதுங்கி இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரி பத்மனை தேடி வந்த போது அவரது பெண் தோழி முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால் போலீசார் சந்தேகம் அடைந்தனர். சென்னை மாதவரத்தில் உள்ள பெண் தோழி வீட்டின் முதல் தளத்தில் பதுங்கி இருந்ததை கண்டறிந்த போலீசார், பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்தனர். செல்போன் சிக்னலை வைத்து பெண் தோழி வீட்டில் பதுங்கியிருந்த ஹரிபத்மனை போலீசார் பிடித்தனர். தன் மீது புகார் கூறிய அனைவரிடம் சகஜமாக மட்டுமே பழகினேன் என ஹரிபத்மன் கூறியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் இன்று மாலை தலைமைச் செயலாளரை சந்தித்து அறிக்கையை சமர்பிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. கலாசேத்ரா பாலியல் புகார் விவகாரத்தில், மாதவரத்தில் தோழி வீட்டில் பதுங்கியிருந்த நிலையில், நடன ஆசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார். கலாசேத்ரா விவகாரத்தில், மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமாரி நேரில் விசாரணை நடத்தினார். இன்று காலை கலாசேத்ரா இயக்குநர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

பாலியல் புகார் சுமத்தப்பட்ட பேராசிரியர்களை கல்லுரிக்குள் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளேன். கலாஷேத்ராவில் குறைதீர் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது. தேர்வு நேரம் என்பதால் மாணவிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுத்தி இருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் என்னென்ன புகார்கள் வந்துள்ளது என்று விவரத்தை கலாஷேத்ரா இயக்குனரிடம் கேட்டுள்ளோம் என்று மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி கூறியுள்ளார்.

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் 5ஆம் தேதி முதல்தேர்வுகள் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. பாலியல் புகார் எழுந்ததால் 6-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 5ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவித்தனர்.கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் 5-ம் தேதி முதல் கல்லூரிக்கு திரும்ப மறுப்பு தெரிவித்துள்ளனர். புகாருக்குள்ளான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை மீண்டும் கல்லூரிக்கு வரமாட்டோம் என அறிவித்துள்ளனர். 5-ம் தேதி கல்லூரி திறக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்த நிலையில் மாணவிகள் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில் கலாஷேத்ரா விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் கல்லூரி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர்கள் ஹரிபத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நடவடிக்கை எடுத்திருப்பது தொடர்பாக மாணவிகளிடம் கலாஷேத்ரா நிர்வாகம் வாய்மொழியாக கூறியுள்ளது. மாணவிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என கலாஷேத்ரா நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

You may also like

Leave a Comment

five − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi