திருவாரூர்: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நேற்று நடைபெற்றது. திருவாரூர் பஜனைமடத்தெருவை சேர்ந்த நாகராஜன் (78) என்பவர் திருவாரூரில் இயங்கி வரும் பிரபல ஓட்டலில் சப்ளையராக பணியாற்றியபோது இபிஎப் திட்டத்தில் செலுத்திய பங்குத்தொகை கிடைக்கவில்லை என்று கலெக்டரிடம் புகார் தெரிவிக்க வந்துள்ளார். அங்குள்ள இருக்கையில் அமர்ந்தவர் மயங்கி சாய்ந்தார். உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். திருவாரூர் போலீசார் நடத்திய விசாரணையில், நாகராஜனுக்கு கீதா (70) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு நெஞ்சுவலி ஏற்பட்டு சரியாகியுள்ளது. நேற்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு செல்வதற்காக சென்றபோது வழியில் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கையை தெரிவிக்க சென்ற நிலையில் இறந்தது தெரிய வந்தது.