கிணத்துக்கடவு: கோவை அருகே பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவையை அடுத்த கிணத்துக்கடவு, வடசித்தூர் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த 100 குடியிருப்புகள் உள்ளன. சமீபத்தில் குடியிருப்பு மற்றும் சாலைகள் ரூ.1 கோடியில் புனரமைக்கப்பட்டது. அப்போது சமத்துவபுர முகப்பில் இருந்த பெரியார் சிலையும் பராமரிக்கப்பட்டு, பாதுகாப்புக்காக இரும்பு கூண்டு அமைக்கப்பட்டது. இச்சிலையை பாதுகாக்க போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். நேற்று காலை ஒரு போலீஸ்காரர் வேலை முடிந்து சென்றார். சிறிது நேரத்திலேயே பெரியார் சிலை மீது சமூக விரோதிகள் சிலர் மாட்டுச்சாணம் ஊற்றி அவமதித்தனர். தகவலறிந்து பொதுமக்கள் பெரியார் சிலை முன்பு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திமுக நிர்வாகிகள் நெகமம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து சம்பந்தப்பட்ட சமூக விரோதிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் பெரியார் சிலை சுத்தம் செய்யப்பட்டது.