கோவை: கோவையில் முஸ்தாக் அகமது என்பவரை அடித்துக் கொன்ற வழக்கில் இந்து மக்கள் கட்சி பிரமுகர்கள் 2 பேர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். முஸ்தாக் அகமது கொலை வழக்கில் ராகுல், இந்து மக்கள் கட்சி பிரமுகர்கள் மணிகண்ட மூர்த்தி, மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகுலின் மனைவி தனது குழந்தைக்கு பாலூட்டுவதை முஸ்தாக் அகமது பார்த்ததாக சந்தேகப்பட்டு தாக்குதல் நடந்துள்ளது.
முஸ்தாக் அகமது வீட்டுக்கு நேரில் சென்று தகராறு செய்து அவரை ராகுல் தாக்கியதாக கூறப்படுகிறது. தகராறை தொடர்ந்து அண்ணன் மணிகண்ட மூர்த்தி, நண்பர் மனோஜை போன் ராகுல் செய்து வரவைத்துள்ளார். 3 பேரும் சேர்ந்து முஸ்தாக் அகமதுவிடம் தகராறில் ஈடுபட்டு கடுமையாக தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ரோந்து போலீசார் ராகுல் தரப்பினரை எச்சரித்து மறுநாள் காலை இரு தரப்பினரை விசாரணைக்கு வருமாறு கூறிச்சென்றனர்.
ரோந்து போலீசார் சென்ற பிறகு 3 பேரும் சேர்ந்து முஸ்தாக் அகமதுவை கடுமையாக தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடுமையாக தாக்கப்பட்ட முஸ்தாக் அகமது, வீட்டுக்கு செல்லும் வழியில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்தார். இந்த நிலையில் கொலை வழக்கு பதிவுசெய்து இந்து மக்கள் கட்சி பிரமுகர்கள்2 பேர் உட்பட 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.