இருப்பினும், பணத்தை பெற்று கொண்ட பலர் ரோடு ஷோவில் பங்கேற்கவில்லை. இதனால், மோடி ரோடு ஷோ நடந்து கொண்டிருக்கும்போது கூவி கூவி ஆட்களை அழைத்து வந்து கூட்டத்தை காட்டினர். பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பியவர்களை எல்லாம் அழைத்து வந்து கூட்டத்தை காட்டினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக கோவை நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்களை அழைத்து வர பாஜ நிர்வாகிகள் முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி கூட்டத்தை கூட்ட முடியவில்லை.
இதனால் சாலையின் இருபுறமும் குறைந்த அளவே பொதுமக்கள், தொண்டர்கள் இருந்து மோடி யை மலர் தூவி வரவேற்றனர். கொங்கு மண்டலம் எங்களுக்கு பலமானது என்று பாஜவினர் கூறினாலும், கோவையில் மோடிக்கு கூட்டம் வரவில்லை. குறிப்பாக, அண்ணாமலை கோவையில் போட்டியிட போவதாக கூறும் நிலையில் கூட்டம் கூடாததால் பாஜ தலைவர் அப்செட்டில் உள்ளனர். இந்த ரோடு ஷோ முடிவில் ஆர்.எஸ்.புரத்தில் கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உருவப்படங்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்டு ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவு தங்கி ஓய்வு எடுத்தார்.
பிரதமர் மோடி வருகையொட்டி கோவை மாநகரில் பெரும்பாலான சாலைகள் மூடப்பட்டன. மேட்டுப்பாளையம் சாலை எருகம்பெனி முதல் பூ மார்க்கெட் வரையில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆர்.எஸ்.புரம் பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த பகுதியில் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. நேற்று பிளஸ் 1 மாணவர்களுக்கு உயிரியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வு நடந்தது. பேருந்துகள் கிடைக்காத காரணத்தால் தேர்வு முடிந்து வீட்டிற்கு மாணவ, மாணவிகள் நடந்தே சென்றனர். பள்ளிகளுக்கு மதியத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டது. பேருந்துகள் இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 6 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்றனர். பலர் வீடுகள் வரை நடந்தே சென்றனர்.
கோவையில் மோடியின் ரோடு ஷோவுக்காக மேட்டுப்பாளையம் ரோடு, ஆர்.எஸ்.புரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக புதிதாக போடப்பட்டதார்சாலையில் ராட்சத மெஷின் கொண்டு துளை போடப்பட்டு, இரும்பு தடுப்பு கம்பி அமைக்கப்பட்டது. கோவை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம், பில்லூர்-3 குடிநீர் திட்டம், மழைநீர் வடிகால் திட்டம் போன்ற பல்ேவறு திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டு தற்போதுதான் புதிய சாலைகள் போடப்பட்டன. அந்த சாலைகளை பிரதமர் வருகைக்காக துளை போட்டு குண்டும், குழியமாக்கி வீணாக்குகிறார்களே என அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.
* 10,000 கடை மூடல்; பல கோடி வருவாய் பாதிப்பு
பிரதமர் மோடி ரோடு ஷோவுக்காக மேட்டுப்பாளையம் சாலையில் எரு கம்பெனி முதல் பூ மார்க்கெட் வரையும், 100 அடி ரோடு, புதுபாலம் முதல் சாய்பாபாகோவில் வரையிலான சாலை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த சிறு, பெரிய கடைகள், கம்பெனிகள், கார், பைக் ஷோரூம்கள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், கம்பெனிகள் மூடப்பட்டன. இதனால் பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இது தவிர மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் போலீசார் கெடுபிடி காரணமாக பாதிக்கப்பட்டனர்.