கோவை: கோவையில் 2019-2020 கால்வாய் திட்டம் முறையாக கையாளபடாதது பற்றி துறை செயலாளர்களை அழைத்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கீட்டு குழு தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்திருக்கிறார். செல்வ பெருந்தகை தலைமையிலான பொது கணக்கீட்டு குழுவினர் 2 நாள் ஆய்வு பணிக்காக உதகை சென்றனர். அதன்படி முதல் நாளான இன்று அந்த குழுவினர் ஆட்சியர் அலுவலகம் அருகே இருக்கும் டேவிஸ் பூங்காவை ஆய்வு செய்து ரூ.1 கோடி மதிப்பில் நடைபெறும் புனரமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து உழவர் சந்தை சென்று அங்கிருந்த விவசாயிகளிடம் சந்தை பராமரிப்பு விவரங்களை கேட்டறிந்தார். சந்தைகளில் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறதா எனவும் கேட்டனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தையும் குழுவினர் பார்வையிட்டனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த செல்வ பெருந்தகை; உதகையில் பல பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தார். முன்னதாக கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகம் சென்ற செல்வா பெருந்தகை பழங்குடியின மக்களுக்கு சாதி சான்று, வாரிசுச் சான்றிதழ்களை வழங்கினார்.