தேங்காய் தண்ணீரில் புதிய மருந்து கண்டுபிடிப்பு!

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று புகழப்படுகிற கோயம்புத்தூருக்கு மற்றொரு பெருமையும் உண்டு. என்னதான் தொழில் வளர்ச்சி பெருகினாலும் அதே அளவுக்கு விவசாயமும் அங்கு செழித்தோங்கும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டாலும் தென்னைதான் அங்கு பிரதானப் பயிர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் திரும்பும் திசை எங்கும் தென்னைதான் உயர்ந்து நிற்கும். தமிழகம் முழுக்கவே பொள்ளாச்சி இளநீர் என்றால் அதற்கு தனி மவுசுதான். இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் தென்னைக்கே முதலிடத்தை வழங்குகிறார்கள். பொள்ளாச்சி சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்து தினமும் டன் கணக்கில் உற்பத்தி செய்யப்படும்இளநீரும் தேங்காயும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. தென்னை சார்ந்த உற்பத்தி பொருட்களான தேங்காய் நார், தேங்காய் நார்க்கழிவுகள் உள்ளிட்டவை வெளிமாநிலங்களுக்கு மட்டுமின்றி, சீனா, அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்களே அதுபோல பொள்ளாச்சி இளநீரில் இருந்து உருவாக்கப்படும் தேங்காய் மட்டுமின்றி அதன் மூலம் கிடைக்கும் மதிப்புக்கூட்டு பொருட்களுக்கும் மவுசு ஜாஸ்தி. இருப்பினும், தினமும் டன் கணக்கில் தேங்காயிலிருந்து உடைத்து வெளியேற்றப்படும் தண்ணீரானது எந்த விதமான பயன்பாட்டிற்கும் எடுத்துக் கொள்ளப்படாமல் வீணாகி விடுகிறது. அப்படி வீணாகும் தண்ணீரைக் கொண்டு மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிக்க யாரும் முன் வராத நிலையே நீடித்து வந்தது. இதனை மாற்றி அமைக்கும் விதமாக பொள்ளாச்சியின் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இன்ஜினியரான விவேகானந்தன் என்பவர் வீணாகும் தேங்காய்த் தண்ணீரில் இருந்து சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள ஒரு அற்புத மருந்தை கண்டுபிடித்திருக்கிறார். சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் காயங்களை ஆற்றும் வகையில், தேங்காய்த் தண்ணீரில் இருந்து கோகோ ஹீல் எனும் மருந்தை தயாரித்து அதனை சந்தைப்படுத்தவும் தயாராகி இருக்கிறார் விவேகானந்தன். இவரின் ஆராய்ச்சியை மேம்படுத்த, மத்திய அரசின் அறிவியல் ஆய்வு மையம், உள்நாட்டுத் தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டுத் துறை ரூ.80 லட்சம் நிதி வழங்கி இருக்கிறது.

இவரின் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியைப் பாராட்டி அண்மையில் டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, விருது வழங்கி கௌரவித்து இருக்கிறார்.இத்தகைய சாதனையை நிகழ்த்திக் காட்டிய விவேகானந்தனைச் சந்தித்தோம். “பொள்ளாச்சியை பூர்வீகம் கொண்டு காலம் காலமாக எங்கள் குடும்பத்தில் அனைவரும் விவசாயம் சார்ந்த தொழிலை செய்து வருகிறோம். எனக்கும் விவசாயத்தில் அதிக நாட்டம் இருந்தது. இருப்பினும் இளமையில் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என இன்ஜினியர் படிப்பை நிறைவு செய்தேன். தற்போது சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடாக இந்தியா மாறி வருகிறது. இதற்கு உணவு, வாழ்க்கை முறை என்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்த சர்க்கரை நோய் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில், இந்தியாவும் உள்ளது. தற்போது மக்கள் தொகையில் சுமார் 17 சதவீதம் பேர் சர்க்கரை நோயாளிகளாக இருக்கின்றனர். இது வரும் 2030-ம் ஆண்டுக்குள் 19 சதவீதமாக உயரும் என்கின்றனர். ஒரு நபருக்கு, சர்க்கரை நோய் பாதிப்பால் புண்கள் எளிதில் ஆறாது. இதனால் கால்கள், விரல்களை கூட அகற்ற வேண்டிய அபாயம் ஏற்பட்டு விடுகிறது. அதை குணப்படுத்த அதிக தொகையை மக்கள் செலவிட வேண்டிய சூழல் இருக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு புண் ஏற்பட்டால் அதை குணப்படுத்தும் பெரும்பாலான மருந்துகள் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், தென்னை விவசாயம் நிறைந்த பொள்ளாச்சியில், அந்த தொழில் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட முடிவு செய்தேன். கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் கொப்பரைக்காக உடைக்கப்படும் தேங்காய்களில் உள்ள தண்ணீர் தினமும் 20 கோடி லிட்டர் வீணாகிறது. இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்பதை அறிந்து, தேங்காய் தண்ணீரை மதிப்பு கூட்டும் பொருளாக மாற்றி மருந்து கண்டுபிடிக்க கோவை தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் எனது ஆராய்ச்சி தொடங்கப்பட்டது. அதன்படி தேங்காய் எண்ணெயில் இருந்து தேங்காய் லாரிக் அமிலத்தை மூலப்பொருளாக கொண்டு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, எலிக்கு சர்க்கரை நோயை ஏற்படுத்தி, அதன் மூலம் ஏற்படும் காயத்திற்கு இந்த மருந்தைபோட்டு சோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவரின் காயத்திற்கு இந்த மருந்து பயன்படுத்தப்பட்டது. அந்த ஆய்வு வெற்றிகரமாக அமைந்தது. காயத்தின் மீது மருந்து அடங்கிய பேண்டேஜ் வைத்தால் ஒட்டிக்கொள்ளும். ஆனால் தேங்காய் தண்ணீரில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்து, எளிதாக குணமடைய செய்யும் என நிரூபனமாகியுள்ளது. இவ்வாறு தேங்காய் தண்ணீரில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு மருந்தை தொடர்ந்து3 நாட்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு காப்புரிமையையும் பெறப்பட்டு தற்போது மத்திய அரசின் இறுதிக்கட்ட ஆய்வில் உள்ளது. மத்திய அரசிடம் இருந்து விரைவில் அனுமதி கிடைக்கும். இந்தியாவில் வாழும் நடுத்தர மக்கள் சர்க்கரை நோயால் ஏற்படும் புண்களை ஆர செய்ய ஆயிரக்கணக்கான தொகை செலவு செய்கின்றனர். அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு கட்டுப்படியாகாது என்பது தெரிந்த விஷயம். அதனை மாற்றி அமைக்க எனது கண்டுபிடிப்பு ஒரு வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
தொடர்புக்கு:
விவேகானந்தன்: 99449 51234

தேங்காய் நீரின் மகத்துவம்

தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. தேங்காய் நீரில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன. ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி. அமினோ அமிலங்கள், என்சைம்கள், பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் சி மற்றும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் போன்ற கனிமங்களைக் கொண்டிருக்கும். இவை சருமத்தின் H நிலையை சமன் செய்கிறது. தேங்காய் நீர் உடலின் பளபளப்பை மீட்டுத் தருகிறது. தேங்காய் நீரில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளதால் தோல் அரிப்பு அல்லது தோல் தொற்று களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் நம் உடலின் நீர்ச்சத்து அதிகரித்து உடல் வறட்சி அடையாது. தேங்காய் நீர் பசி உணர்வை கட்டுப்படுத்தும். எனவே இதை எவ்வளவு குடித்தாலும் நம் உடலில் கொழுப்புகள் மற்றும் உடல் எடையை அதிகரிக்காமல் தடுக்கும் செரிமான பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து 7 நாட்கள் தேங்காய் நீரை குடித்து வந்தால் செரிமானக் கோளாறுகள் மற்றும் வாய்வு தொல்லைகள் வராது. தைராய்டு பிரச்னை உள்ளவர்கள்தினமும் தேங்காய் தண்ணீர் குடித்தால், அது உடலின் ஆற்றல் மற்றும் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்குகிறது. தேங்காய் நீரில் சர்க்கரையின் அளவு மிக குறைவாக உள்ளது. இதன் கலோரிகளும் குறைவாக உள்ளதால் நீரிழிவு நோயாளிகளும் இதனை பயன்படுத்தி பலன் அடையலாம்.

Related posts

இடிந்து விழும் நிலையில் மின்வாரிய அலுவலகம்: புதிதாக கட்ட வலியுறுத்தல்

தனியார் பள்ளியிடம் இருந்து கையக்கப்படுத்திய இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லூரி அமைக்க வேண்டும்: வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை