சென்னை: ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து, சென்னைக்கு பெருமளவு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமான நிலைய சுங்க அதிகாரிகள், தனிப்படை அமைத்து, நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து, இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. கென்யா நாட்டைச் சேர்ந்த சுமார் 30 வயது இளம்பெண் ஒருவர், நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக, சுற்றுலா பயணி விசாவில் சென்னைக்கு வந்தார். அவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று, பெண் சுங்க அதிகாரிகள் முழுமையாக சோதனை நடத்தினர். அவர் அணிந்திருந்த, காலணிகள் சற்று வித்தியாசமாக இருந்தன.
பின்னர் அந்த இளம்பெண்ணின் காலணிகளை கழற்றிப் பார்த்து சோதனையிட்டனர். அந்த காலணிகளின் அடி பாகங்களில் ரகசிய அறை வைத்து அதற்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் 5 ஜோடி காலணிகள் அவருடைய பைக்குள் இருந்தன. அவைகளிலும் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து, சுங்க அதிகாரிகள், காலணிகளில் இருந்த போதைப் பொருட்கள் முழுவதையும் பறிமுதல் செய்து, அது எந்த வகையான போதைப்பொருள் என்பதை ஆய்வு செய்வதற்காக, சோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து வந்த தகவலில், அது மிகவும் சக்தி வாய்ந்த கொக்கைன் போதைப் பொருள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கென்யா இளம் பெண்ணிடம் இருந்து மொத்தமாக 2.2 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் சர்வதேச மதிப்பு ₹22 கோடி.
பின்னர் சுங்க அதிகாரிகள் இளம்பெண்ணை கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இளம்பெண் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. எனவே இவர் சென்னையில் யாரிடம் இந்த போதைப்பொருளை கொடுப்பதற்காக எடுத்து வந்தார். சென்னையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் யார் இருக்கின்றனர் என்றும் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.