புதுடெல்லி: சத்தீஸ்கரில் நடந்த நிலக்கரி ஊழல் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்பி. விஜய் தர்தா மற்றும் நிலக்கரித் துறை முன்னாள் செயலர் எச்.சி. குப்தா ஆகியோர் குற்றவாளிகள் என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சத்தீஷ்கர் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ. வழக்கு பதிந்து விசாரித்து வந்தது. இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்த வந்தது. இந்த வழக்கில் சிறப்பு நீதிபதி சஞ்சய் பன்சால் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் காங்கிரஸ் மாநிலங்களவை முன்னாள் எம்பி. விஜய் தர்தாவை நிலக்கரி ஊழல் வழக்கில் 13வது தண்டனைக் குற்றவாளியாக அறிவித்து தீர்ப்பு வழங்கினார்.
முன்னாள் நிலக்கரி துறை செயலாளர் எச்.சி.குப்தா உள்பட 7 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. விஜய் தர்தாவின் மகன் தேவேந்தர் தர்தா, அரசு மூத்த அதிகாரிகள் க்ரோபா, சாம்ரியா, யஷ்வந்த் மால் எரிசக்தி தனியார் நிறுவன இயக்குனர் மனோஜ்குமார் ஆகியோரும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. கிரிமினல் சதி, ஏமாற்றுதல் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அனைவரும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான தண்டனை விவரம் வருகிற 18ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.