கூட்டுறவு வங்கிகளில் ரூ.20 லட்சமாக இருந்த நகைக்கடன் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயர்வு

சென்னை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் இணைப்பதிவாளர்களுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் அனைத்து வகை கடன்களுக்கும் 2023-24ம் ஆண்டிற்கான குறியீட்டினை அதிகரித்து மறுநிர்ணயம் செய்து வழங்கப்பட்டது. சில மத்திய கூட்டுறவு வங்கிகளின் கோரிக்கையை ஏற்று பின்வரும் கடன்களின் உச்சவரம்பு அதிகரிக்கப்படுகிறது.

நகை கடன் தற்போது உச்சவரம்பான ரூ.20 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்த்தப்படுகிறது. சம்பள கடன் ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாகவும், சிறுவணிக கடன் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ரூ.50 ஆயிரம் வரையிலான தனிநபர் பிணைய கடனுக்கு ஒரு நபர் பிணையம் அளிக்க வேண்டும். ரூ.50,001 முதல் ரூ.1 லட்சம் வரையிலான தனிநபர் பிணைய கடனுக்கு இரண்டு பேர் பிணையம் அளிக்க வேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு அறிவுரைகளை பின்பற்றி மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, பணியாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள், கடன் வழங்குதல் தொடர்பாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்