திசையன்விளை: முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை தவறாக சித்தரித்த கடலூர் பாஜ நிர்வாகி, நெல்லை பாஜ பிரமுகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம், திசையன்விளையை சேர்ந்தவர் முத்துக்குமார் (35). நகைத் தொழிலாளியான இவர் பா.ஜ. பிரமுகராக உள்ளார். இவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டார். இதையடுத்து அவரது முகநூலில் கடும் கண்டனங்கள் குவிந்தன. மேலும் முதல்வரை தவறாக சித்தரித்த முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு நகர திமுக செயலாளர் ஜான் கென்னடி, திசையன்விளை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து முத்துக்குமாரை போலீசார் பிடித்து நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் ஒப்படைத்தனர். சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து முத்துக்குமாரை நேற்று கைது செய்தனர். மேலும் இப்பதிவை தயாரித்த, கடலூர் மாவட்டம், கீரைப்பாளையத்தைச் சேர்ந்த பா.ஜ. ஐடி விங்க் பகுதி தலைவர் ஜெயக்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.