இவற்றை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஜனவரி 18ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி முதல்வரை தாக்கியோ, நேரடியாகவோ பேசவில்லை. தமிழக அரசை மட்டுமே விமர்சித்ததார். தங்கள் போராட்டத்திற்கு பிறகு 12 மணி நேர வேலை அரசு அறிவிப்பை திரும்பப்பெறும்போது, தங்கள் கருத்து எப்படி அவதூறாக கருத முடியும். அவதூறு வழக்கு தொடர்வதற்கான அரசாணையை பிறப்பிக்கும்போது அரசு அதிகாரிகள் மனதை செலுத்தி விசயத்தை ஆராயாமல், இயந்திரத்தனமாக அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர் என்றார்.
அப்போது குறிப்பிட்ட நீதிபதி, அரசை விமர்சித்த அதேவேளையில், முதல்வர் பெயரையும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளதாகத் தானே அவதூறு வழக்கு ஆவணங்களில் உள்ளது என்று சி.வி.சண்முகம் தரப்பிற்கு கேள்வி எழுப்பினார். அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, அரசையும் முதல்வரையும் விமர்சிக்கும் வகையில் சி.வி.சண்முகம் நேரடியாக தாக்கி பேசிவிட்டு தற்போது அவதூறு கருத்து இல்லை என கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கஞ்சா, 12 மணி நேர வேலை தொடர்பாக முதல்வரையும், அரசையும் அவதூறாக பேசியது தொடர்பான 2 அவதூறு வழக்குகளை எதிர்த்து சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், தொழிலாளர் சட்டம், மோசடி என்று முதல்வருக்கு எதிராக பேசியது தொடர்பாக சி.வி.சண்முகம் மீது தமிழக அரசு தொடர்ந்த 2 அவதூறு வழக்குகளை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.