காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் ரத்த வங்கி வாகனம் மோதி ஜவுளிக்கடை ஊழியர் பரிதாபமாக பலியானார். காஞ்சிபுரத்தை அடுத்த களியனூரை சேர்ந்தவர் செல்வம் (24). இவர், கட்டுமானத் துறையில் கொத்தனாராக வேலை பார்த்து, சமீப காலமாக பட்டு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை வீட்டிலிருந்து வேலைக்கு புறப்பட்ட அவர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் சன்னதி தெரு வழியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் ரத்தவங்கி வாகனம் சாலையில் நடந்து சென்ற முதியவரை உரசியபடி, டூவீலரில் சென்ற செல்வத்தின் மீது மோதியது.
இதனால், நிலைதடுமாறி விழுந்த செல்வத்தின் தலைமீது ரத்த வங்கி வாகனம் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால், தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த செல்வத்தை மீட்டு, அருகில் இருந்தவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில் சிகிச்சை பலனின்றி செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.