ரிஷிவந்தியம் : கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே மண்டகப்பாடி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகன் பிரவீன் குமார். இவர் கடந்த 4ம் தேதி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் சென்ற நாள் முதல் தனக்கு மலேசியாவிலுள்ள கோலாலம்பூர் பகுதியின் தட்பவெப்ப நிலை ஒத்துப்போகவில்லை இதன் காரணமாக உடம்பில் கொப்பளங்கள் வருகிறது. மூச்சு திணறல் ஏற்படுகிறது என தனது பெற்றோர்களிடம் தெரிவித்தார்.
மேலும், தன்னை உடனடியாக வீட்டிற்கு அழைத்து வரும்படி கூறியுள்ளார். ஆனால் ஏஜென்ட் மூலமாக வேலைக்குச் சென்றதால் அழைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர், வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோருக்கு கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் இளைஞர் பிரவீன்குமார்.
அந்த வீடியோவில் தான் மலேசியாவிற்கு வேலைக்காக வந்ததாகவும் ஆனால் வந்த இடத்தில் தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் உடலில் கொப்பளங்கள் வருகிறது எனவும் கூறி தன்னை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் மஸ்தான் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
அதே போல தனது மகனை மீட்டு தர வேண்டும் என பிரவீன் குமாரின் தாய், தந்தை ஆகிய இருவரும் கைகூப்பி மண்டியிட்டு வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு இளைஞரை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.