திருவள்ளூர்: சோரஞ்சேரி ஊராட்சியில் தூய்மையே சேவை இயக்கம் சார்பில் தீவிர தூய்மை பணி, பசுமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம், சோரஞ்சேரி ஊராட்சியில் தூய்மையே சேவை இயக்கம் சார்பில் தீவிர தூய்மை பணி மற்றும் பசுமை மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் எம்.சுகுமார் தலைமை தாங்கினார்.
தூய்மை பாரத இயக்க வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.சிவானந்தம் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் தேன்மொழி வரவேற்றார். இந்த விழாவில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் க.வெங்கடேசன் தீவிர தூய்மை பணி மற்றும் பசுமை மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவை முன்னிட்டு சோரஞ்சேரி ஊராட்சியில் குப்பைகள் அதிகம் சேரும் பகுதிகளில் சிறப்பு நிகழ்ச்சியாக முழு அளவில் தூய்மை பணிகள் மேற்கொண்டு அந்த இடங்களில் மீண்டும் குப்பைகள் கொட்டாதவாறு வண்ண கோலமிட்டு எச்சரிக்கை பலகைகள் நடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் திமுக நிர்வாகிகள் ஏ.மாறன, ஏ.உதயசூரியன் மற்றும் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.