கீழ்வேளூர்: இந்திய நாடு முழுவதும் நடைபெற்ற நகரங்களுக்கு இடையேயான தூய்மை நகரங்கள் போட்டி முடிவு டெல்லியில் கடந்த 11ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் 15,000 மக்கள் தொகைக்கு உட்பட்ட சிறிய நகரங்கள் பிரிவில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி தென் இந்திய அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து கீழ்வேளூர் பேரூராட்சிக்கு தென் இந்தியாவின் தூய்மையான நகரம் விருதை ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் மனோஜ் ஜோஷி, பேரூராட்சிகள் துறை இயக்குநர் கிரண் குரலா ஆகியோர் கீழ்வேளூர் பேரூராட்சி தலைவர் இந்திரா காந்தி சேகர், செயல்அலுவலர் குகன், பேரூராட்சி துணைத் தலைவர் சந்திர சேகரன் ஆகியோரிடம் வழங்கினார்.
கீழ்வேளூர் பேரூராட்சி விருது பெற்றது தொடர்பாக செயல் அலுவலர் குகன் கூறுகையில், ‘தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி இருந்த நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் மூலம் பொது மக்களிடம் தூய்மை விழிப்புணர்வு மேற்கொண்டதால் இந்த விருது கிடைத்தது. மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஒத்துழைப்புக்கும் பணியாளர்கள் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி இது,’ என்றார்.