Thursday, September 19, 2024
Home » தூய்மை பணியாளரின் மகள் நகராட்சி ஆணையராக நியமனம் கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு

தூய்மை பணியாளரின் மகள் நகராட்சி ஆணையராக நியமனம் கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு

by MuthuKumar

சென்னை: சென்னை,தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார். இதில் மன்னார்குடியை சேர்ந்த தூய்மை பணியாளரின் மகள் துர்கா திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் அவர் பேசியதாவது:
நகராட்சி ஆணையராக பணி ஆணையை முதல்வரின் கைகளால் வாங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு அரசு கொடுக்கும் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி படித்தாலே நாம் நல்ல நிலைக்கு செல்லலாம். நான் அதுபோன்று தான் அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் படித்தேன். டி.என்.பி.எஸ்.சி படிக்கும் போதும் அரசால் நடத்தப்படும் இலவச பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்து இன்றைக்கு நகராட்சி ஆணையராக பணி ஆணையை பெற்றுள்ளேன். என்னுடைய அப்பா மன்னார்குடி நகராட்சியில் தூய்மைபணியாளராக வேலை பார்த்தவர். அவரது ஒவ்வொரு கஷ்டங்களையும் நான் பார்த்துள்ளேன்.

என்னுடைய அப்பா நல்ல சட்டை போட்டது கிடையாது, நல்ல வேஷ்டி கட்டியதுகிடையாது, நல்ல செருப்பு அணிந்தது கிடையாது. எப்போதும் காக்கி உடையில் தான் இருப்பார். நான் நல்லா இருக்கனும், நல்லா படிக்கனும்; என் பொண்ணு நான் பட்ட கஷ்டத்தை படக்கூடாது என நினைத்து அதற்காக நிறைய என் அப்பா இழந்துள்ளார். அவர் நல்ல சாப்பாடு கூட சாப்டது கிடையாது. அவர் இந்த தருணத்தில் இருந்து இருந்தால் நல்லா இருந்து இருக்கும்; அவர் 7 மாசத்திற்கு முன்பு தவறிவிட்டார். இன்றைக்கு நான் நகராட்சி ஆணையராகி உள்ளேன். இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், முதல்வருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இந்த பேட்டியை கண்டு தனது டிவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது:
நகராட்சி ஆணையராக பொறுப்பேற்கும் துர்கா அவர்களின் பேட்டியை கேட்டு அகமகிழ்ந்தேன். கல்வி தான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்கு துர்காவே எடுத்துக்காட்டு; நான் மீண்டும் சொல்கிறேன் ‘கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து’

You may also like

Leave a Comment

fourteen − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi