கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாணவர்களை வகுப்பறைக்குள் செருப்பு அணியாமல் அமர வைத்திருந்ததை பார்த்து செருப்பணிய அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் அப்பள்ளியில் உள்ள 40 வகுப்பறைகளுக்கு மிதியடிகளை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பின்னர் வகுப்பறைகளை ஆய்வு செய்த மேயர் சுந்தரி ராஜா, குப்பைகள் நிறைந்து காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தானே குப்பைகளை அகற்றி தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார். தூய்மை பணியில் மெத்தனம் காட்டிய சுகாதார ஆய்வாளர், சுகாதார அலுவலர் உள்பட 5 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.