பள்ளியில் சக மாணவர்களுடன் மோதல்: 8ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு


கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி, அம்பேத்கர் நகர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (45). இவர் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் கடையில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு செல்வமேரி (40) என்ற மனைவியும், ஜான்சி (16) என்ற மகளும், ஸ்டீபன் (13) மற்றும் வின்சென்ட் (11) ஆகிய மகன்களும் உள்ளனர். இதில், ஜான்சி நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கூடுவாஞ்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஸ்டீபன் 8ம் வகுப்பும், வின்சன்ட் 7ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிச் சென்ற ஸ்டீபன் மாலையில் சக மாணவர்களுடன் விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது, மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ஸ்டீபன் மயங்கி விழுந்து வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்தோணிராஜ் பள்ளிக்கு விரைந்து வந்து தனது மகனை மீட்டு கூடுவாஞ்சேரி உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஸ்டீபனை சேர்த்தார். மீண்டும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை ஸ்டீபன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி