சேலம்: சேலத்தில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 7ம் வகுப்பு மாணவன் மீது, போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, கடந்த 4 நாட்களுக்கு முன்பு தொடர்ந்து வயிற்றுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த சிறுமியை, அவரது தாய் சேலம் அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை டாக்டர் பரிசோதனை செய்து பார்த்த போது, சிறுமி 3 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து அம்மாப்பேட்டை மகளிர் போலீசாருக்கு, மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், வந்த மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 14வயது சிறுவன், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அச்சிறுமி கூறினார்.
தற்போது, அந்த சிறுவன் 7ம் வகுப்பு முடித்த நிலையில், வரும் 10ம் தேதி 8ம் வகுப்புக்கு செல்கிறார். அச்சிறுமியின் தாய் வீட்டு வேலைக்கு செல்கிறார். காலையில் சென்றால், மாலையில் தான் வீடு திரும்புவார். அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஒன்றாக விளையாடுவார்கள். இதில் சிறுமிக்கும், அந்த சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும் அங்கிருந்த காட்டுப்பகுதிக்கு தனியாக சென்று நெருக்கமாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து, சிறுவனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவனும் உண்மையை ஒப்புக்கொண்டான். இதனை தொடர்ந்து, அந்த சிறுவன் மீது போக்சோ பதிவு செய்யப்பட்டது. சிறுவனை இளம்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, போலீசார் முடிவு செய்துள்ளனர். அதே போல, சிறுமிக்கு மரபணு சோதனை நடத்தவும் நடடிவக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.