இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. இந்த கட்டுமானப் பணிககள் விறுவிறுப்பாக நடக்கிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்துக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம். இந்த ரயில் நிலையம் புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையில், 3 நடைமேடைகளுடன் அமைய உள்ளது. 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரயில்கள் நிற்கும் வகையில் நடைமேடை இருக்கும்.
கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையம் சில கி.மீ தொலைவிலேயே இருப்பதால் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நிற்கும் வகையில் நீண்ட நடைமேடை அமைக்க வேண்டிய அவசியமில்லை. இந்த ரயில் நிலையத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தி முடிவு செய்யப்படும். மின் தூக்கி, நகரும் படிக்கட்டுடன் கூடிய நடை மேம்பாலம், ரயில் நிலைய கட்டிடம், நடைமேடையின் மேற்கூரைகள் போன்ற உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, ரயில் நிலையத்துடன் இணைக்க 450 மீட்டர் நீளத்துக்கு ஆகாய நடை பாலமும் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.