சென்னை: சிவில் சர்வீசஸ் தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கும் மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் தாக்கல் செய்த மனுவில், ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்- ஐ.பி.எஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் ஆங்கிலம், இந்தி மொழிகளில் கேள்விகள் இடம் பெற்றுள்ளது. இது இந்தி தெரிந்தவர்களுக்கு சாதகமாகவும் மாநில மொழிகளில் புலமை பெற்றவர்களுக்கு பாரபட்சமாகவும் உள்ளது. வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனவே அரசியல் சாசனத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணையை தலைமை நீதிபதி கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, டிச. 6க்கு தள்ளி வைத்துள்ளது.