சிவில் நீதிபதி பதவிக்கு 29ம் தேதி நேர்முக தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: சிவில் நீதிபதி பதவிக்கு வரும் 29ம் தேதி முதல் நேர்முக தேர்வு தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவியில் காலியாக உள்ள 245 பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மை எழுத்து தேர்வை(மெயின் தேர்வு) கடந்த ஆண்டு நவம்பர் 4, 5ம் தேதி நடத்தியது. இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 472 பேர் அனுமதிக்கப்பட்டனர். இந்த பட்டியல் கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் உரிமையியல் நீதிபதி பதவிக்கான நேர்முக தேர்வு வரும் 29ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை(பிப்ரவரி 3, 4 சனி, ஞாயிறு தவிர) சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் இணையவழி விண்ணப்பத்தில் தெரிவித்தவாறு அனைத்து மூலச்சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும். நேர்முக தேர்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு குறிப்பாணையை தேர்வாணைய இணையதளத்தில்(www.tnpsc.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் விவரங்கள் தெரிவிக்கப்படும். அழைப்பாணை தனியே அனுப்பப்படமாட்டாது. நேர்முக தேர்விற்கு உரிய நாளில், நேரத்தில் கலந்து கொள்ள தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்படாது என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை