Sunday, June 30, 2024
Home » மாநகர பேருந்துகளில் மாணவர்கள் படியில் பயணம் செய்வதை தடுக்கும் வழிமுறை; டிரைவர், கண்டக்டர்களுக்கு எம்டிசி அறிவுறுத்தல்

மாநகர பேருந்துகளில் மாணவர்கள் படியில் பயணம் செய்வதை தடுக்கும் வழிமுறை; டிரைவர், கண்டக்டர்களுக்கு எம்டிசி அறிவுறுத்தல்

by Suresh

சென்னை: பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மாணவர்கள் படியில் பயணிப்பதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு எம்டிசி அறிவுரை வழங்கியுள்ளது. ன்னையில் இயங்கி வரும் மாநகர பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு செல்வது வாடிக்கையாகி வருகிறது. அதுமட்டுமின்றி பேருந்து புறப்பட்ட உடன் ஓடி வந்து ஏறுவது, ஒரு காலை தரையில் தேய்த்தபடி செல்வது, ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டு செல்வது, படிக்கட்டில் மொத்தமாக நின்று கொண்டு பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது, தாளம் போட்டுக் கொண்டு செல்வது, கேலி, கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதன் காரணமாக சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள் பலர் அவ்வப்போது தவறி கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் பலமுறை எச்சரித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் யாரும் திருந்தியபாடில்லை. தனால் பல வழித்தடங்களில் திடீரென ஓட்டுநர்கள் பேருந்தை நடுரோட்டில் நிறுத்தி விடுகின்றனர். படிக்கட்டில் இருந்து உள்ளே ஏறினால் மட்டுமே பேருந்து இயக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர். அப்போது ஓட்டுநருக்கும், மாணவர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு விடுகிறது. சில நேரங்களில், ஓட்டுனர் மற்றும் கண்டக்டர்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதனால், சக பயணிகளுக்கு கால தாமதம் ஏற்பட்டு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.

பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்து வரும் காட்சிகள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. சமீபத்தில், குன்றத்தூர் பகுதியில் பள்ளி மாணவன் ஒருவர் பேருந்து படியில் பயணம் செய்தபோது, கீழே விழுந்து தனது இரண்டு கால்களை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்க, சாதாரண கட்டண பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்பட உள்ளன. அதேபோல், படிக்கட்டின் இருபுறமும் உள்ள ஜன்னல் கம்பிகள் கண்ணாடி மூலம் மூடப்பட்டுள்ளது. இதுதவிர அவசர உதவி எண்கள், சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் வசதி உள்ளிட்டவைகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்கான மாதிரி பேருந்து தற்போது தயாராகி, சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மாணவர்கள் படியில் பயணிப்பதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு எம்டிசி அறிவுரை வழங்கியுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கை: நகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்து விபத்து ஏற்படுவதை தவிர்த்திட, கதவுகள் பொருத்தப்படாத பேருந்துகளில் முதற்கட்டமாக 200 பேருந்துகளுக்கு முன், பின் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகள் பொருத்துவதற்கு ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீதமுள்ள கதவுகள் இல்லாத பேருந்துகளுக்கு படிப்படியாக தானியங்கி கதவுகள் பொருத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கி கொண்டு பயணம் செய்வதை தவிர்க்க, முன் மற்றும் பின் பக்கங்களில் உள்ள படிகட்டுகளின் அருகே உள்ள ஜன்னல்களுக்கு கண்ணாடி நிரந்தரமாக பொறுத்தவும், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கதவுகள் பொருத்தப்படாத பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றம் நடத்துநர்களுக்கு நிலையான இயக்க முறைமை வாயிலாக கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
* பேருந்து நிறுத்தங்களிலிருந்து பேருந்தை நகர்த்தும் முன்னர், ஓட்டுனர் பின்பார்வை கண்ணாடி மூலம் பயணிகள் யாராவது ஓடி வந்து ஏற முயற்சிக்கின்றார்களா என கவனித்தும் மற்றும் நடத்துனரும் படிக்கட்டில் ஏற முயல்பவர்களை கண்காணித்தும் விசில் அடித்து நிறுத்தி ஏற்றி பேருந்தை இயக்க வேண்டும்.
* பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தால் நடத்துநர் அவர்களுக்கு தக்க அறிவுரை மற்றும் எச்சரிக்கை செய்து பேருந்தின் உள்ளே வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தொடர்ந்து ஆபத்தான முறையில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் பேருந்தை சாலை ஓரம் நிறுத்தி மாணவர்கள் பேருந்தின் உள்ளே வந்த பிறகு பேருந்தை இயக்க வேண்டும்.
* மீண்டும் தொடர்ந்து ஆபத்தான முறையில் படிக்கட்டில் பயணம் செய்பவர் மீது அருகில் உள்ள போக்குவரத்து காவலர் / காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பேருந்து சாலை சந்திப்பு மற்றும் கூட்ட நெரிசல் பகுதிகளில் மெதுவாக செல்லும் போது இறங்க முயற்சிக்கும் பயணிகளை நடத்துநர் எச்சரிக்கை செய்ய வேண்டும்.
* பேருந்து நிறுத்தம் வருவதை நடத்துநர் குரல் மூலம் முன் கூட்டியே தெரிவித்து பயணிகளை இறங்க தயார்படுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

eighteen − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi