திருவேற்காடு: மாநகர பேருந்து ஓட்டுநரை தாக்கிய போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். தென்காசி சங்கரன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (34), மாநகர பேருந்து ஓட்டுநர். இவர், பூந்தமல்லி – திருவொற்றியூர் வரை செல்லும் தடம் எண் 101 என்ற மாநகர பேருந்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, ஜெயக்குமார் பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பூந்தமல்லியில் இருந்து திருவொற்றியூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது காசிமேடு பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பைக்கில் குடிபோதையில் வந்த ஒருவர், பேருந்தின் கண்ணாடியை கையால் தட்டியுள்ளார்.
அப்போது பேருந்து ஓட்டுநர் ஜெயக்குமார், ‘‘ஏன் பேருந்தின் கண்ணாடியை கையால் தட்டுகிறாய்” என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி, தகாத வார்த்தையில் திட்டி, ஓட்டுநர் ஜெயக்குமாரை கையால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றார். இதில் உதட்டில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் ஜெயக்குமார், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று, பின்னர் நேற்று முன்தினம் காலை காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாநகர பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபரை தேடி வருகின்றனர்.