நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ரயிலை தேடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் நான் திருச்சி சென்று அங்கிருந்து திண்டுக்கல் செல்ல வேண்டும். எனவே திருச்சி செல்வதற்கு எந்த பிளாட்பாமில் ரயில் நிற்கும் என கேட்டார். இதை கேட்டு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தலை சுற்றியது.
அந்த நபரிடம் விசாரித்தபோது அவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அந்தோணிராஜ் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்று விட்டு காரைக்கால் அருகேயுள்ள வாஞ்சூரில் மது அருந்தி போதை தலைக்கேறிய நிலையில் தனது உடமைகளை தவற விட்டு அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தது தெரிய வந்தது. மது மயக்கத்தில் அவர் கலெக்டர் அலுவலகம் எது, ரயில் நிலையம் எது என தெரியாமல் கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்து திருச்சி செல்ல பிளாட்பார்ம் கேட்டு அலப்பறை செய்தது தெரியவந்தது. இதன் பின்னர் போலீசார் அந்த நபரை நைசாக பேசி அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினர்.