சினேகன் பெயரை பயன்படுத்தி நன்கொடை நடிகை ஜெயலட்சுமியின் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சினேகன் என்கிற அறக்கட்டளையை திரைப்பட பாடலாசிரியர் சினேகன் நடத்திவரும் நிலையில், பாஜவில் உள்ள நடிகை ஜெயலட்சுமி, சினேகம் என்கிற அறக்கட்டளையை உருவாக்கி பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக நடிகை ஜெயலட்சுமி மீது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை ஜெயலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலட்சுமி தரப்பில் தவறாக நன்கொடை பெற்றதாக எவரும் புகார் அளிக்கவில்லை. சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவே அறக்கட்டளையை உருவாக்கி சொந்த வருமானத்தில் இருந்தே பெரும் நிதியை செலவிட்டேன். கடந்த 2018ம் ஆண்டு முதல் தெரியாத நபர்களிடம் இருந்து பணம் வசூலிக்கவில்லை. சென்னை திருமங்கலம் காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்துள்ளார். தற்போது வரை முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளவில்லை.

எனவே, என் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிட்டார். இதையடுத்து நடிகை ஜெயலட்சுமி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related posts

மாவட்ட காவல்துறை சார்பில் எல்லையோர கிராமங்களில் குறைதீர் முகாம்கள்

செய்யாறு, ஆரணி அருகே அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

கர்நாடகாவில் பாஜக எம்.பி. சார்பில் கட்சி தொண்டர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டதால் சர்ச்சை: காங்கிரஸ் கண்டனம்