Thursday, June 27, 2024
Home » தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்: ஒருவருக்கொருவர் கேக் வழங்கி உற்சாகம்; மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி

தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்: ஒருவருக்கொருவர் கேக் வழங்கி உற்சாகம்; மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி

by Karthik Yash

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஒருவருக்கொருவர் கேக் கொடுத்து உற்சாகமாக வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் ஒரு மாதங்களுக்கு முன்பே களைகட்டுவது வழக்கம். ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் மக்கள் தற்போது சகஜ நிலைக்கு திரும்பினர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கொண்டாட்டப்பட்டது.

இதை தொடர்ந்து தேவாலயங்களில் மின்விளக்குகள், ஒளிரும் நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டன. வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. சென்னை நகரில் நேற்று முன்தினம் இரவு முதலே ஏராளமானோர் சாலைகளில் கூடி ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். சான்டாகிளாஸ் வேடமணிந்தவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் வலம் வந்து பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்கும் நேரமான நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு ஏராளமானோர் ஒளிரும் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கினர்.

தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பிரார்த்தனைக்கு வந்தவர்களை கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்கள் வரவேற்றனர். பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பிரார்த்தனை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு, கேக் வழங்கி மகிழ்ந்தனர். கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டியும், புது துணி உடுத்தியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சென்னையில் பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், சாந்தோம் தேவாலயம், செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆலயம், லஸ் பிரகாச மாதா தேவாலயம், ராயப்பேட்டை வெஸ்லி தேவாலயம், அண்ணா சாலை மேம்பாலம் அருகில் உள்ள கதீட்ரல் தேவாலயம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நேற்றும் தேவாலயங்களில் நடந்த பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சென்னையில் பல தேவாலயங்களில் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள், உணவு வழங்கப்பட்டது.

மேலும் பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி, கேக் வழங்கப்பட்டது.இளம் தலைமுறையினர் சமூகவலைதளங்களான வாட்ஸ் அப், டிவிட்டர், பேஸ்புக், எஸ்எம்எஸ் வாயிலாக கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். டிஜிட்டல் வாழ்த்து அட்டைகளை சமூக வலைதள குழுக்கள், இமெயில் மூலம் பகிர்ந்து நண்பர்கள், உறவினர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரியில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை சற்று களையிழந்திருந்தது. அங்குள்ள தேவாலயங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் பழைய நிலைக்கு திரும்பும் வகையில் பிரார்த்தனை செய்யப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, போர்வை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

You may also like

Leave a Comment

16 + 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi