ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் தனியார் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு காஞ்சிபுரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் வேலைபார்த்து வருகின்றனர். இவர்களை அழைத்து செல்வதற்காக தொழிற்சாலை சார்பில் வேன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று வழக்கம் போல 20க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஏற்றி கொண்டு சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வேன் சென்று கொண்ருந்தது.
சுங்குவார்சத்திரம் அருகே முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது, வேன் வேகமாக மோதியது. இதில், வேனின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. அனைவரும் அலறி துடித்தனர். 5 பெண்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சுங்குவார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த 9 பேரையும் மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.