சித்தூர் அருகே மனைவியை கணவர் சுத்தியால் அடித்து கொலை

பாலக்காடு : பாலக்காடு சித்தூர் அருகே கம்பிளிசுங்கம் பகுதியில் மனைவியை கணவர் சுத்தியால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்காடு சித்தூர் அருகே கம்பிளிசுங்கம் பகுதியை சேர்ந்த உதயனின் மனைவி ஊர்மிளா (33). இவர் உதயனிடம் விவாகரத்து பெற்று கொண்டு கொழிஞ்சாம்பாறையில் உள்ள புத்தன்பாதையை சேர்ந்த குட்டன் (எ) சஜீஷ் (37) என்பவரை 2வது திருமணம் செய்துள்ளார். இவர் கோழிக்கடைகளில் வேஸ்ட் கழிவு பொருட்கள் வாங்கி மீன் வளர்ப்பவர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் இருவரும் கொழிஞ்சாம்பாறையில் வீடு எடுத்து வசித்து வந்தனர். ஆனால் இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 2ம் கணவரை பிரிந்த நிலையில் ஊர்மிளா 10 மாதங்களாக தாயாரின் வீட்டில் தங்கி கஞ்சிக்கோட்டிலுள்ள ஒரு தனியார் பீர் பாட்டில் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், மனைவியை சஜீஷ் அடிக்கடி போன் மூலமாக மிரட்டி வந்துள்ளார்.

இதனால் கணவரின் போன் வந்தால் எடுக்காமல் இருந்த காரணத்தால், கடந்த மே 18ம் தேதி ஊர்மிளாவின் வீட்டிற்கு சஜீஷ் சென்று அடித்து துன்புறுத்தியுள்ளார். அன்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக புகாரின் பேரில் சிறை தண்டனை அனுபவித்து கடந்த 3 மாதத்திற்கு முன் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் ஊர்மிளா தாயார் வீட்டிலிருந்து வேலைக்கு செல்கின்ற நேரம் பார்த்து சஜீஷ் ஊர்மிளாவின் தலையில் சுத்தியால் அடித்து காயப்படுத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஊர்மிளாவை அப்பகுதி மக்கள் மீட்டு சித்தூர் தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஊர்மிளா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சித்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொழிஞ்சாம்பாறையில் வைத்து சஜீஷை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

காஞ்சிபுரம் மாநகராட்சி குழு உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த கவுன்சிலர்கள்

மறைமலை நகர் அருகே பரபரப்பு விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுப்பு

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை; பேஸ்புக் காதலன் கைது